புதன், நவம்பர் 16

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}} 1-20

அறத்துப்பால் பாயிரவியல் கடவுள் வாழ்த்து.......

குறள் 1:   
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.




குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம்:
 தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.


குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

விளக்கம்:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர். 




குறள் 4:  
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


விளக்கம்:  
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.


குறள் 5:  
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.  


விளக்கம்;  
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.


குறள் : 6 
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்.  


விளக்கம்: 
ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நலமுடன் வாழ்வார்.


குறள் 7:  
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது.  


விளக்கம்:  
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.


குறள் : 8 
அறவழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது.  


விளக்கம்: 
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்குப் பொருளும் இன்பமும் ஆகிய கடலைக் கடக்கவியலாது.


குறள் 9:  
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை.  


விளக்கம்:  
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.


குறள் 10:  
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார்.  


விளக்கம்:  
கடவுளின் திருவடிகளை அடைந்தவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார். அடையாதவர், அதனைக் கடக்கமாட்டார்.


அறத்துப்பால் பாயிரவியல் வான்சிறப்பு........


குறள் 11;
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்
அமிழ்தம் என்றுணரற் பாற்று.  


விளக்கம்;  
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.


குறள் 12:  
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை.  


விளக்கம்; 
உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி அவற்றை உண்ணுகின்றவர்க்குத் தானும் உணவாக அமைவது மழை.


குறள் 13:  
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து 
உள்நின்று உடற்றும் பசி.  


விளக்கம்:  
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.


குறள் 14:  
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் 
வாரி வளங்குன்றிக் கால்.  


விளக்கம்:  
மழை என்னும் செல்வத்தில் வளம் குறையுமானால், உழவர்கள் கலப்பை கொண்டு உழமாட்டார்கள்.


குறள் 15:  
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே 
எடுப்பதூஉம் எல்லாம் மழை.  


விளக்கம்:  
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.


குறள் 16:  
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே 
பசும்புல் தலைகாண்பு அரிது.  


விளக்கம்:  
மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தாலல்லாமல், பசுமையான புல்லின் தலையையும் காணமுடியாது.


குறள் 17:  
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்.  


விளக்கம்:  
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.


குறள் 18:  
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் 
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.  


விளக்கம்:  
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.


குறள் 19:  
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் 
வானம் வழங்கா தெனின்.  


விளக்கம்:  
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.


குறள் 20:  
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் 
வான்இன்று அமையாது ஒழுக்கு.  


விளக்கம்:  
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.





எனது  தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்...... {அறத்துப்பால் பாயிரவியல் நீத்தார் பெருமை}samy..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக