வெள்ளி, நவம்பர் 25

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}201-230

அறத்துப்பால் - இல்லறவியல் - தீவினையச்சம்;;;;;;;;;;;;;




குறள் 201:

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

விளக்கம் :

தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

குறள் 202:


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

 விளக்கம் :

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

குறள் 203:

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

விளக்கம் :

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

குறள் 204:

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

 விளக்கம் :

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

குறள் 205:

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

விளக்கம் :

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

குறள் 206:

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

 விளக்கம் :

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.


குறள் 207:

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

 விளக்கம் :

எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.


குறள் 208:

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.

விளக்கம் :

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.


குறள் 209:

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

விளக்கம் :

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.


குறள் 210:

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.


ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.




அறத்துப்பால் - இல்லறவியல் - ஒப்புரவறிதல்;;;;;;;;;;;


குறள் 211: 
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு. 


விளக்கம் ;
 கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்


குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு. 


விளக்கம் ;
 தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்


குறள் 213: 
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற. 


விளக்கம் ;
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது


குறள் 214: 
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் 
செத்தாருள் வைக்கப் படும். 


விளக்கம் ; 
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.


குறள் 215: 
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 
பேரறி வாளன் திரு. 


விளக்கம் ; 
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.


குறள் 216: 
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் 
நயனுடை யான்கண் படின். 


விளக்கம் ;  
ஈ.ர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.




குறள் 217: 
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் 
பெருந்தகை யான்கண் படின். 


விளக்கம் ;
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.


குறள் 218: 
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் 
கடனறி காட்சி யவர். 


விளக்கம் ;
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.


குறள் 219: 
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர 
செய்யாது அமைகலா வாறு. 


விளக்கம் ;
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.


குறள் 220: 
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் 
விற்றுக்கோள் தக்க துடைத்து. 


விளக்கம் ;
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.






அறத்துப்பால் - இல்லறவியல் - ஈகை;;;;;;;;
குறள் 221:  
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.  


விளக்கம் :  
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈ.கைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.  


குறள் 222:  
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 
இல்லெனினும் ஈதலே நன்று.  


விளக்கம் :  
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.  


குறள் 223:  
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலனுடையான் கண்ணே யுள.  


விளக்கம் :  
யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.  


குறள் 224:  
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 
இன்முகங் காணும் அளவு.  


விளக்கம் :  
ஈ.தல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.  


குறள் 225:  
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின்.  


விளக்கம் :  
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.  


குறள் 226:  
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி.  


விளக்கம் :  
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.  


குறள் 227:  
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் 
தீப்பிணி தீண்டல் அரிது.  


விளக்கம் :  
பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய 
நோய் தொடுவதும் அரிது.  


குறள் 228:  
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
வைத்திழக்கும் வன்க ணவர்.  


விளக்கம் :  
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.  


குறள் 229:  
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல்.  


விளக்கம் :  
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.   


குறள் 230:  
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.  குறள் விளக்கம் :  சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.






எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக