வியாழன், நவம்பர் 17

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}41-60

அறத்துப்பால் இல்லறவியல் இல்வாழ்க்கை..............


குறள் 41: 
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.   


விளக்கம்:  
இல்லறத்தில் வாழ்கின்றவன் என்னும் சிறப்புடையவன் மற்ற(கல்வி,மனைத்துறவு, துறவு) அறநிலைகளிலுள்ள மூவர்க்கும் நல்ல ஒழுக்க நெறியில் உறுதியான துணையாவன்.


குறள் 42:  
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை.  


விளக்கம்:  
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து
போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.


குறள் 43:  
தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.  


விளக்கம்:  
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.


 குறள் 44:  
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்.  


விளக்கம்:  
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.


குறள் 45:  
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது.  


விளக்கம்:  
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.


குறள் 46:  
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் 
போஓய்ப் பெறுவ தெவன்.  


விளக்கம்:  
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.


குறள் 47: 
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.  


விளக்கம்:  
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான். 


குறள் 48:  
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து.  


விளக்கம்:   
மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.


குறள் 49:  
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.  


விளக்கம்:  
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.


குறள் 50:  
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.  


விளக்கம்:  
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்


அறத்துப்பால் இல்லறவியல் வாழ்க்கைத் துணைநலம்........


குறள் 51:  
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.  


விளக்கம்:  
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.


குறள் 52:  
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை 
எனைமாட்சித் தாயினும் இல்.  


விளக்கம்:  
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.


குறள் 53:  
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் 
இல்லவள் மாணாக் கடை?.  


விளக்கம்:  
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.


குறள் 54:  
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மைஉண் டாகப் பெறின்.  


விளக்கம்:  
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?


குறள் 55: 
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை.  


விளக்கம்:  
தெய்வத்தை தொழாமல், தன் கணவனைத் தெய்வமாக தொழுது காலையில் துயில் எழுகின்றவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
  
குறள் 56:  
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.  


விளக்கம்:  
கற்பிலிருந்து தவறாமல் தன்னைக் காத்தும், தன் கணவனை பாதுகாத்தும், இருவரிடத்தும் புகழ் நீங்காமல் காத்தும் தன் கடமைகளில் தவறாமல் நடப்பவளே சிறந்த பெண்ணாவாள்.


குறள் 57:  
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் 
நிறைகாக்கும் காப்பே தலை.  


விளக்கம்:  
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.


குறள் 58:  
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 
புத்தேளிர் வாழும் உலகு.  


விளக்கம்:  
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.


குறள் 59:  
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் 
ஏறுபோல் பீடு நடை.   


விளக்கம்:  
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.


குறள் 60:  
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் 
நன்கலம் நன்மக்கட் பேறு.  


விளக்கம்:  
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.


எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுங்கள்.தொடரும்......
{அறத்துப்பால் இல்லறவியல் புதல்வரைப் பெறுதல்}samy.........................................



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக