வெள்ளி, நவம்பர் 18

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}81-100

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் விருந்தோம்பல்.............


குறள் 81:  
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.   


விளக்கம்:  
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே. 


 குறள் 82:  
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   


விளக்கம்:  
விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.


குறள் -83  
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.  


விளக்கம்: 
நாள்தோறும் தன்னிடம் வருகின்ற விருந்தினரைப் பேணி உபசரிப்பவனின் வாழ்க்கை, வறுமையால் வருந்திக் கெடுவது இல்லை.


குறள் 84:  
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.   


விளக்கம்:   
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.  


குறள் 85:  
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.   


விளக்கம்:   
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?


குறள் 86:  
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.  


விளக்கம்:   
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர். 


குறள் 87:  
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.  


விளக்கம்:   
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.


குறள் 88:  
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.   


விளக்கம்:   
விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.  


குறள் 89:  
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு.   


விளக்கம்:   
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.


குறள் 90:  
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
நோக்கக் குநழ்யும் விருந்து.   


விளக்கம்:   
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.




அறத்துப்பால் இல்லறவியல் இனியவைகூறல் ............




குறள் 91:  
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.  


விளக்கம்:   
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.   


குறள் 92:  
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின்.  


விளக்கம்:  
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.


குறள் 93:  
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம்.  


விளக்கம்:   
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.    


குறள் 94:  
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.  


விளக்கம்:   
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.


குறள் 95:  
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
அணியல்ல மற்றுப் பிற.   


விளக்கம்:   
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.   


குறள் 96:  
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.   


விளக்கம்:   
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.


குறள் - 97  
நயன்ஈன்னு நன்றி பயக்கும் பயன்ஈன்னு 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.   


விளக்கம்:   
பிறருக்கு நன்மையைக் கொடுத்து, இனிமைப் பண்பிலிருந்து நீங்காத சொல், நேர்மையான வாழ்க்கையும், நல்வழியில் நடப்பதால் உண்டாகும் பயனையும் கொடுக்கும்.




குறள் 98:  
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்.  


விளக்கம்:   
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.   


குறள் 99:  
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.  விளக்கம்:   இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.


குறள் 100:  
இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.  


விளக்கம்:  
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும். 










எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுங்கள்.தொடரும்......
அறத்துப்பால் இல்லறவியல் நடுவு நிலைமை........samy



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக