செவ்வாய், டிசம்பர் 6

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}291-300

அறத்துப்பால் துறவறவியல் வாய்மை;;;;;;;;;;;;;

குறள் 291: 
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்.

விளக்கம் :  
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

குறள் 292: 
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்.

விளக்கம் :  
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.


குறள் 293: 
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம் :  
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால்,சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

குறள் 294: 
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன். 

விளக்கம் :  
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

குறள் 295: 
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு 
தானஞ்செய் வாரின் தலை. 

விளக்கம் :  
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

குறள் 296: 
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை 
எல்லா அறமுந் தரும். 

விளக்கம் :  
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

குறள் 297: 
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று. 

விளக்கம் :  
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

குறள் 298:
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும்.

விளக்கம் :  
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

குறள் 299: 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு. 

விளக்கம் :  
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.


குறள் 300: 
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் 
வாய்மையின் நல்ல பிற. 

விளக்கம் :  
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.


எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக